கோலாகலமாக தொடங்கிய 16வது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டி வரும் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வானவேடிக்கைகளுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் கோலகலமாக நடைபெற்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளுடன் இன்றைய தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழா மேடையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து இரு அணிகளின் கேப்டன்கள் வண்டியில் ஊர்வலமாக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கிரிக்கெட் மைதானம் முழுக்க மஞ்சள் மழையில் காணப்பட்டது. நடப்பு சாம்பியன் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றிக் கோப்பையுடன் வளம் வந்தார்.
மைதானமே அதிரும் வகையில் வரவேற்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மேடைக்கு வந்தார். இதனையடுத்து சென்னை அணி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே டாஸ் நடைபெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றது. அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.