அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு! 2-ஆம் நாளில் 6 மணி நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பினார்!!

அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாம் நாளான இன்று அமலாக்கத்துறை நடத்திய விசாரணை 6 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்ற நிலையில் வீடு திரும்பினார்.  தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் …

அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாம் நாளான இன்று அமலாக்கத்துறை நடத்திய விசாரணை 6 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்ற நிலையில் வீடு திரும்பினார். 

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல்  அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது  வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின்  மகனுமான கௌதமசிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல்  கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த 2006 -2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய  உறவினர்கள்  மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை  ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதமசிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும்  புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக  அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு  சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இரவு 8 மணிக்கு வரை சோதனை நடைபெற்ற நிலையில்  நான்கு பைகளில்  இருந்து ஆவணங்களை அமலாக்கதுறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
பின்னர் பொன்முடி சாஸ்திரி பவனில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரது காரிலேயே அழைத்து சென்றனர். இந்த விசாரணை நள்ளிரவு சுமார் 3 மணி வரை நீடித்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில்உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
இதனிடையே, பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ. 81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது, அதோடு ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என அமலாக்கத்துறை அறிவித்தது. மேலும் பொன்முடிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது. 
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை 6 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இரவு 10 மணிக்கு பிறகு முடிவுற்றது. இதனை அடுத்து பொன்முடியும் அவரது மகன் கௌதமசிகாமணியும் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். இதன் வாயிலாக 2 நாட்களாக நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்தது. ஆயினும் விசாரணை குறித்து சம்மன் அனுப்பினால் நேரில் ஆஜராக வேண்டும் என இருவரிடமும் அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.