ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. 13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய…

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் பலப்பரிட்சை செய்ய களம் இறங்கியது.

இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இதில் தொடக்கம் முதலே ரோஹித் சர்மா அதிரடியா சிக்சர்களை பறக்கவிட எதிர்முனையில் இருந்த சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினர். இவரும் ரோஹித் சர்மாவும் சீராக பவுண்டரிகளை பறக்கவிட்ட நிலையில் அணியின் ரன்கள் உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், 9 ஓவர்கள் முடிந்த நிலையில், மேக்ஸ்வெல் பந்தில் காச் கொடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். இவர் 3 சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 31 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் 4 ரன்களுக்கு வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலியும், கேல்.ராகுலும் மிகவும் பொறுமையாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழுவதை தவிர்க்க முயற்சி செய்தனர்.

இந்நிலையில், வெற்றிகரமாக அரை சதத்தை கடந்த விராட் கோலி, 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவரை தொடந்து களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதற்குள் 41 ஓவர்கள் நிறைவடைந்தது. அப்போது அரைசதத்தை கடந்து விளையாடி வந்த கே.எல்.ராகுலும் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சூர்யகுமார் யாதவ் களத்தில் இருக்க மறுபுறம் களம் இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். இறுதியாக 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. 2 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். களத்தில் டிராவிஸ் ஹெட்டும், மிட்சல் மார்சும் விளையாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.