திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சென்னை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த பிகில் பட விவகாரம் தொடர்பாக அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் வராத பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடந்த 2020 பிப்ரவரி மாதம் ஒருமுறை அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதில், வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத 77கோடி ரூபாய், மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அப்போதைய வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, சென்னை தியாகராய நகர், ராகவயா தெருவில் உள்ள அவரது அலுவலத்தில் இன்று காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மதுரை மேலமாசி வீதியில் இருக்கக்கூடிய அவருடைய அலுவலகம், கீரைத்துறை பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய சொந்த வீடு மற்றும் தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மீண்டும் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது, திரைப்பட துறையினர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்