“சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது!” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது; இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் 9 வயது சிறுமி…

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது; இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தியின் கொலை புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியின் கொலைக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், தவெகவின் தலைவருமான விஜய், சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.