ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்திய விவகாரம் – இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்!

ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் பயணித்த காரை இளைஞர்கள் சுற்றுவளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பலரால் பகிரப்பட்டு கண்டனங்கள் எழுந்தனர்.

இதையும் படியுங்கள் : குடியரசு தின அணிவகுப்பில் திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி இடம்பெற்றதா? – உண்மை என்ன?

அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  இதற்கிடையே, பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் 5 தனிப்படைகள் அமைத்து இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடத்தப்பட்டு ஈசிஆர் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தாம்பரம் மாநகரல் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.