சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்னும் ஆவணத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானதையடுத்து வீரப்பன் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வீரப்பன் வாழ்கை வரலாறு குறித்து “தி ஹண்ட் ஃபார் வீரப்பன்” என்னும் பெயரில் ஆவணத்தொடர் ஒன்றை தயாரித்துள்ளது. வீரப்பன் குறித்து இதற்கு முன் வெளியான திரைப்படங்களிலும், தொடர்களிலும் முழுமையான மற்றும் சரியான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என மூத்த பத்திரிக்கையாளர்களும், மலைவாழ் மக்களும், கருத்து தெரிவிக்கின்றனர்.
வீரப்பனின் வரலாறு குறித்து ஏராளமான தொடர்களும், திரைப்படங்கள் வெளிவந்தாலும் புத்தங்கங்களின் வழியே அவரை குறிப்பிட்டது போல விவரமான தகவல்கள் வெளிக்கொணரப்படவில்லை. அண்மையில் இந்த தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அப்போதைய காவல் அதிகாரிகள் வீரப்பனை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்குவது போன்ற காட்சிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் ஆவணப்படத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியானது. இந்த தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடர் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வீரப்பன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
வீரப்பனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், அவருக்கு எதிராக இன்னொரு சாராரும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். “வீரப்பன் பயங்கரவாதியல்ல, அவர் ஒரு வனக்காவலர்” என்று ஒரு பிரிவினர் சமூக வலைதளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர். அதற்கு எதிர்கருத்து கொண்டவர்கள், “தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று குவித்தவர்தான் வனக்காவலரா?” என்று விமர்சிக்கின்றனர்.
இந்த தொடர் தற்போது இணையத்தில் ஒரு பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்து #TheHuntForVeerappan #Veerappan போன்ற ஹேஸ்டேகுகள் ட்ரெண்டிங்கிள் இருந்து வருகின்றன.







