தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில், 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில், உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. ஆனால், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாமஸ் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு மலேசியாவை 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. இதனால், தாமஸ் கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது என பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஶ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி, இந்தோனேசியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி ஒற்றையர் பிரிவில் லக்ஷய சென் மற்றும் ஶ்ரீகாந்த் கிடாம்பியும், இரட்டையர் பிரிவில் சீரக் செட்டி, ரங்கி ரெட்டி இணையும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என வெற்றியை பதிவு செய்தது இந்திய பேட்மின்டன் அணி. 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி: ‘எச்சில் துப்பிய விவகாரம்; காவலர் லூயீஸ் ஜோன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்’
இந்த வெற்றியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தாமஸ்கோப்பை சாம்பியன்ஷிப்பை முதன்முறையாக வென்று சாதனைபடைத்த இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









