ஜூலை 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,48,995 கோடி

கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாதம்தோறும் கிடைக்கும்…

கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாதம்தோறும் கிடைக்கும் வரி வருவாய் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி எவ்வளவு குறைந்துள்ளது அல்லது கூடியுள்ளது என்பது உடனடியாக தெரிய வருகிறது.

அந்த வகையில் நேற்றுடன் முடிந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 1,48,995 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 25,751 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 79,518 கோடியாகவும் உள்ளது.

கொரோனா தொற்றால் குறைந்திருந்த ஜிஎஸ்டி வரி வருவாய் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மிகாமல் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 1,67,540 கோடியாகவும், மே மாதத்தில் இது 1,40,885 கோடி ரூபாயாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,44,616 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ. 1,48,995 கோடியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலையை பொருத்தவரை ஜிஎஸ்டி வரி வருவாய் விகிதம் பெரிய மாநிலங்களைவிட சிறிய மாநிலங்களில் அதிகரித்துக் காணப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 18 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 17 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 12 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 34 சதவீதமாகவும் ஜிஎஸ்டி வரி வருவாய் விகிதம் உள்ளது. அதேநேரத்தில், புதுச்சேரியில் இது 54 சதவீதமாகவும், லடாக்கில் 54 சதவீதமாகவும், லட்சத்தீவில் 69 சதவீதமாகவும் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.