தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். உடனே ட்விட்டர் பதிவிலும் அந்த தகவலை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் லேசான காய்ச்சல் தான் உள்ளது. இதனால் வீட்டிலேயே மருந்து, மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்து கொள்கிறார். இதனால் அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தை ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் முகாம் அலுவலகத்துக்கு சென்று வழங்கினார்.
அண்மைச் செய்தி: ‘கஞ்சா போதையில் இளைஞரைக் கடத்திய இருவர் கைது’
அந்த கடிதத்தில், தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாகப் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இந்த தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.









