பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான், டெல்மைக்ரான் என உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃப்ளோரனா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் சேர்ந்து இருப்பதால், இந்த வைரசுக்கு ஃப்ளோரனா என்ற பெயர் சூட்டப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வரும் இந்த சூழலில், இஸ்ரேலில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நான்காவது டோஸ் தடுப்பூசியும் செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டில், 65 லட்சம் பேர் – முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 42 லட்சம் பேர் இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்திருக்கும் முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளோரனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக நாடுகள் அனைத்தும் டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் ஃப்ளோரனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.