கோயில் திருவிழாவின்போது மகனுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, பஞ்சாயத்தின் முடிவை ஏற்று இளைஞர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சனகோட்டகத்தில் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த நாகூர்மீரானுக்கும், கலைசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடியாக மாறியது. இதையடுத்து, தகராறில் ஈடுபட்ட கலைசெல்வனின் தந்தை அஞ்சுகண்ணுவை கிராம பஞ்சாயத்து அழைத்து பேசியது. அப்போது, மகன் செய்த தண்டனைக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் நாகூர் மீரான் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நிர்பந்தித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொருளாதார வசதி இல்லாத அஞ்சுகண்ணு காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை ஒப்பு கொண்டார். பின்னர் எதிர் தரப்பு இளைஞர்களின் கால்களில் விழுந்து மகனுக்காக மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் அஞ்சுகண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அஞ்சுகண்ணு உயிரிழந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், அவரை காலில் விழவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அஞ்சுகண்ணு குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
– இரா.நம்பிராஜன்