32.2 C
Chennai
May 20, 2024
இலக்கியம் கட்டுரைகள் தமிழகம் பக்தி

சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)


சுப்பிரமணியன்

” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர்.

விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும் என்பது பொருள். ஒவ்வொரு உயிர்க்கும் காலம் முடியும்போது, அவரவர்க     ள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பலனை அளித்து, பாரபட்சம் காட்டாது, காலத்தை முடித்து வைப்பவர் எமன். காரண,காரியங்களை எமன் தர்மத்துடன் செய்வதால் தர்மர் எனச் சேர்த்து எமதர்மராஜா என அழைக்கப்பட்டார். பூமித்தாயானவள், சிவபெருமானால்,ஒரு சமயம் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை, உயிர்ப்பிக்க ,வழிபாடு செய்த பெருமைக்குரிய ஆலயம் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கதைக்களம் ஒன்று

எமதர்மராஜா, ஏதோ ஆழ்ந்த சிந்தனையில்,அங்கிருந்த குருவி ஒன்றை வெறித்துப் பார்த்தபடி இருக்க,அங்கு வந்த கருட பகவான், “ஆஹா,இந்தக் குருவிக்கு உடன் ஆபத்து வரும் போல இருக்கிறதே,”அதை எப்படியாவது,கேடு காலத்திலிருந்து காப்பாற்றியே தீரவேண்டுமென உறுதி பூண்டு,நல்லெண்ண அடிப்படையில் அதைத் தூக்கிக் கொண்டு,வாயுவேகம்,மனோவேகமாகப் பறந்து,ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் சென்று,ஒரு பெரிய மரத்தின் பொந்தில் வைத்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. காப்பாற்றி விட்டோம் என்கிற நிம்மதி அடைந்தது. அதே நேரம்,அந்த மரத்தின் வேறொரு பொந்திலிருந்த பாம்பு ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து,குருவியை விழுங்கி விட்டது. அதைக் காப்பாற்ற நினைத்த தமது செய்கையே அதற்கு வினையானதை எண்ணிக் கருடன் துக்கம் பீறிட, புறப்பட்ட இடத்திற்கே வந்தது.

எமன், துக்கத்திலிருந்த கருடனை,ஏற இறக்கப் பார்த்து “கருட பகவானே,அந்தக் குருவி,இங்கிருந்து,ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலுள்ள,ஒரு பாம்பினால் இறக்க வேண்டும் என எழுதப்பட்டு உள்ளது. அது எப்படி நிகழப்போகின்றது என்பதை உண்மையிலேயே மிகுந்த ஆச்சிரியத்துடன்,யோசனையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் விதிப்படி நடந்தே விட்டது” என்று எமதர்மன் கூறக் கருடன் விக்கித்து நின்றது.

கதைக்களம் இரண்டு
குருசேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது வேலையாட்கள், போர் நடக்கும் இடங்களை, சுத்தம் செய்து கொண்டும், சமன் படுத்திக் கொண்டும், அங்கு உள்ள மரம் செடி கொடிகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டும், இருந்தனர். அப்போது ஒரு குருவி, அங்கு நின்று கொண்டிருந்த கிருஷ்ணரிடம் வந்தது. “பகவானே,நேற்றுவரை அதோ,அந்த வெட்டப்பட்ட மரத்தில் தான் கூடுகட்டி, குஞ்சுகளைக் காப்பாற்றினேன். இன்றோ நிர்கதியாய் நிற்கிறேன், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என கெஞ்சியது.கிருஷ்ணரோஅதைக் கவனிக்காமல் வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

கூடவே இருந்த அர்ஜுனனுக்கு மனது மிக சங்கடமானது. அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத கிருஷ்ணர், பார்த்தா அங்கே பார், இங்கே பார் என ஏதேதோ வேலைகளை ச்சொல்லிக் கொண்டே தேரில் ஏறி புறப்பட்டார். அர்ஜுன் முகம் வாடி துயரமானது. போகிற வழியில், கிருஷ்ணர் திடீரென்று தேரை நிறுத்தி, தமது வில் அம்புகளுடன் இறங்கி, தூரத்தில் சென்று கொண்டிருந்த,யானை ஒன்றின் கழுத்தில் தொங்கிய பெரிய மணியை குறி பார்த்து வீழ்த்த, மணி சப்தத்துடன் கீழே விழ,யானை பிளறிக்கொண்டு ஓட, அர்ஜுனனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆயிரம் வேலைகளிருக்க இது என்ன வெட்டி வேலை என அவன் மனம் வாடியது. சூரியன் மறையும் நேரம்,வேலை முடிந்து அவரவர், தத்தம் இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். கிருஷ்ணரும்,அர்ஜுனனும் தேரில் ஏறி அவர்களிடத்திற்கு புறப்பட்டனர். வழியில் கிருஷ்ணரால் வீழ்த்தப்பட்ட அந்த மணி கிடந்தது.

“அர்ஜுனா,அதோ அங்கு கிடக்கும் மணியை எடுத்துக் கொண்டுபோய்,தூரத்தில் தெரியும் பெரிய மரத்தின் அடியில், நிமிர்த்தி வைத்து விட்டு வா”என்று கிருஷ்ணர் கூறியதும்,அர்ஜுனன் வேண்டா வெறுப்பாக, இது ஒரு வெட்டி வேலை எனும் நினைப்பில்,தேரிலிருந்து இறங்கி, அந்த மணியைத் தூக்க அதிர்ந்தே போய்விட்டான். ஆச்சர்யம் கலந்த திகைப்பில் உற்றுப் பார்த்த போது,அங்கே அதே குருவி தன் குஞ்சுகளுடன் இருந்தது. வியப்புடன் விழிகள் விரிய அவன் கிருஷ்ணரைப் பார்க்க, அவரோ, அர்த்த புஷ்டியுடன் புன்னகை செய்தார்.

அந்தப் புன்னகையின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது.”வாழ்க்கையில் அவ்வப்போது,என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். நடக்கப் போவதைக் குறித்து, வருந்தி,காலத்தை வீணாக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்” என்பதே அது.
-சுப்பிரமணியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading