மேட்டுப்பாளையத்தில் தன்னை நோக்கி குரைத்தபடி வந்த தெரு நாயை கண்டு
ஆவேசமடைந்த காட்டு யானை நாயை விரட்டிய போது ஊருக்கு புகுந்து மிரட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு
செல்லும் வழியில் சமயபுரம் என்னும் கிராம பகுதி உள்ளது. மேட்டுப்பாளையம்
வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியை ஒட்டி பவானி ஆற்றங்கரையில்
இப்பகுதி அமைந்துள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் காட்டு யானைகள்
இரவு நேரத்தில் நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் சாலையில்
கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதியை சென்றடைகின்றன.
வனப்பகுதியையொட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை உண்டு
சேதப்படுத்தும் யானைகள் பின்னர் மீண்டும் அதிகாலை நேரத்தில் அதே குடியிருப்புகள் வழியாக சமயபுரம் சாலை கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்கு செல்வதை
வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி என்ற காட்டு யானை சமயபுரம் சாலையைக் கடந்து குடியிருப்புகள் வழியாக வனப்பகுதிக்கு சென்று மறைந்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மற்றொரு காட்டு யானை சாலையைக் கடந்து குடியிருப்புக்குள் நுழையும் போது தெருநாய் ஒன்று குரைத்துக் கொண்டே காட்டு யானையை சுற்றி சுற்றி வந்தது.
இதனால் ஆவேசமடைந்த காட்டுயானை பிளிறிக் கொண்டே தும்பிக்கையை தரையில் அடித்து விரட்டியது. மேலும் ஆவேசம் அடைந்த காட்டு யானை ஒரு வீட்டையும் தாக்க முயற்சி செய்தது. காட்டு யானைகள் அட்டகாசத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







