2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பிப் – 24 ஆம் தேதி இரவு உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இரண்டு முறை எனக்கு தனிப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் உயர்மட்ட குழுயுடன் கருத்தை கேட்டறிய வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படலாம்.
இதையும் படியுங்கள் : சூடு பிடிக்கும் மக்களவைத் தேர்தல் – ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக திட்டம்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு. ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல் வந்துள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளது. இதனிடையே, பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தினர். 2026 தேர்தலுக்கான இலக்கு என்னவோ அதை முன்வைத்து தற்போது முடிவு எடுக்க வேண்டி உள்ளது”
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.







