சென்னை தாம்பரம் மெப்சில் பெண் போலீஸிடம் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வயது முதிர்ந்த தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் வந்த மற்றொரு நபர் அவர்களை இடிப்பது போல் கேலி செய்தவாறு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தார். இதனால் குரோம்பேட்டை மெப்ஸ் அருகில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரிடம் குடிபோதையில் வாகனம் இயக்குவதாக வயது முதிர்ந்த தம்பதியினர் தெரிவித்தனர்.
உடனடியாக பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை நபரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி வயது முதிர்ந்த தம்பதியினரை ஆபாசமாக திட்டினார். இதனை தட்டி கேட்ட பெண் போக்குவரத்து காவலரின் கையைப் பிடித்து முறுக்குவது போல் செய்ததால் அருகில் இருந்தவர்கள் தடுத்த போது தகாத வார்த்தையால் பேசி தனக்கு கராத்தே தெரியும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என பேசி ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் பொதுமக்களையும் அந்த போதை இளைஞர் தாக்க முற்பட்டதால், அவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் போதை ஆசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர் அதில் குரோம்பேட்டை துர்கா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







