சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
மறைந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றியவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக சார்பில் 1962ம் ஆண்டு சட்டமேலவை உறுப்பினராக செங்கல்பட்டு தொகுதியில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 1971ம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1996, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர். கல்வித்துறை அமைச்சராக இரண்டு முறை இருந்தவர். 2006-2010 ம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதியமைச்சராக பதவி வகித்தவர். 19 புத்தகங்கள் எழுதியுள்ள இவர், கடந்த 2020ம் ஆண்டு மறைந்தார்.
இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகனின் 101வது பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்பழகனின் குடும்பத்தினருடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருக்குப் பின் திமுக மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர, பகுதி உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான கல்வெட்டை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.