நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கனெக்ட்’. இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மாயா படத்தை போல ’கனெக்ட்’ படமும் திரில்லர் படமாகவே உருவாகியுள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘கனெக்ட்’ திரைப்படம் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது. படத்தின் சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதால் இடைவேளை இல்லாமல் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், இடைவேளை இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ’கனெக்ட்’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.







