ஏலத்தில் எடுத்த காரில் எஞ்சின் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக செலுத்திய பணம் போக, ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீராம் ஆட்டோமால் பிரைவேட் லிமிடெட் என்ற பழைய வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மகிந்திரா பொலிரோ காரை ரூ. 2,66,136 செலுத்தி ஏலத்தில் எடுத்துள்ளார்.
வாங்கிய ஜீப்பில் பழுது ஏதும் உள்ளதா என சிவகாசியில் உள்ள மெக்கானிக்கிடம் கொடுத்து சோதித்தபோது, அந்த காரினுடைய எஞ்சின் அந்த காருடையது இல்லை எனவும் மற்றொரு வாகனத்தினுடைய என்ஜின் எனவும் மெக்கானிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார் வாங்கிய நிறுவனத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் இது தொடர்பாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, ஸ்ரீராம் ஆட்டோமால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காரை திரும்ப பெற்றுக் கொண்டு காரின் தொகை ரூ.2,66,136 -யும் மன உளைச்சலுக்கு ரூ. 1 லட்சமும், வழக்கு செலவு தொகைக்கு ரூ. 10,000-மும் என மொத்தமாக 3,76,136 ரூபாயை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார்.







