கடலூரில் உறவினருடன் நடனமாடியதை மணமகன் கண்டித்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி மணமகன் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணத்தையொட்டி, மாலை வரவேற்பு, விருந்து, உபசரிப்பு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, மணப்பெண் தனது உறவினர் ஒருவருடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார். இதைக் கண்ட மணமகன், மணப்பெண்ணை கண்டித்து தாக்கியதாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், மணப்பெண் திருமணம் வேண்டாம் எனக் கூறி அடம்பிடித்துள்ளார். இந்தச் சம்பவம் மணமகன் – மணமகள் வீட்டார் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்திய நிலையில் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசைப் பொருள்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர். நிச்சயிக்கப்பட்ட அதே நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என பெண் வீட்டார் முடிவு செய்ததையடுத்து, மணப்பெண்ணின் முறைமாமன் பெற்றோர் சம்மதத்துடன் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியதைடுத்து இன்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணமகன் ஸ்ரீதர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் திருமண நிகழ்வில் ஏன் நீ மற்றவர்களோடு ஆடுகிறாய் என கேட்டதற்கு நான் அப்படித்தான் ஆடுவேன் என மணமகள் தெரிவித்ததாகவும், அதற்கு மணப்பெண்ணின் தந்தை வெங்கடேசன் அவரது தாயார் சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து என் பெண்ணை மிரட்டுகிறார் என கூறி தகாத வார்த்தைகளால் கூறி தன்னை மண்டபத்திலேயே தாக்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இதற்கு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிச்சயதார்த்தம் திருமணம் என ஏழு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதால் அந்த தொகையை நஷ்ட ஈடாக பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.