மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டது.
இது நேற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் படிப்படியாக ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற்று வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைந்துள்ளது. இது புயலாக உருமாறி, இன்று அல்லது நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்நோக்கும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.








