கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கலுக்கு அருவிக்கு வரும் நீரின் அளவு, 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 14, 136 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த நீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பினனர் மதியம் 1 மணிக்கு மேல் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இந்நிலையில், நேற்று ஒகேனக்கலுக்கு 10 அயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.







