இரண்டு தேசிய விருதுகளை பெற்ற தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி!

இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு இந்திய மொழியில் வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது, இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் தரைப்பட விருதும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான(special mentions) விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ​’ராயன்’ திரைப்படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக தேசிய விருது (சிறப்பு குறிப்பு – சிறந்த நடிகர்) பெற்றிருப்பதிலும் நான் உண்மையிலேயே பணிவும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். மதிப்பிற்குரிய தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவிற்கும் தேர்வு குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது திரைப்பயணம் முழுவதும் தளராத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது ஆகும். எனது பலத்தின் தூண்களாக இருக்கும் எனது ரசிகர்கள் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் இது இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்புகிறேன். நான் மிகவும் அன்பாகக் கருதும் ஒரு நடிப்புக்காக இந்த சிறப்பு குறிப்பு (Special Mention) அங்கீகாரத்தைப் பெறுவது இந்த கௌரவத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது. மேலும் ஒரு முதல்முறை என்பது எப்போதுமே மறக்க முடியாதது. ‘ராயன்’ படத்திற்காக ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருதை வென்றது நான் என்றும் போற்றும் ஒரு ஆசீர்வாதமாகும். நான் எப்போதும் சொல்வது போல், எண்ணம் போல் வாழ்க்கை!” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.