ராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட மணமகளுக்கு நாய் மற்றும் நாய்க்குட்டியை தாய்மாமன் சீர்வரிசையாக வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
’தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி….’ ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான இந்த பாடல் வரிகளை நாம் நிச்சயம் மறந்திருக்க மாட்டோம். பெண்ணுக்கும் அவளின் தாய் மாமனுக்குமான பந்தத்தை அழகாக இந்த வரிகள் எடுத்துச் சொல்லும். கணவன் வீட்டிற்கு சென்றாலும் பிறந்த வீட்டின் துணை எப்போதும் இருக்கும், தாய்மாமனின் துணை எப்போதும் இருக்கும் என்ற எண்ணத்தை விதைக்க பூப்புனித நீராட்டு விழா தொடங்கி, கல்யாணம், குழந்தைக்கு காது குத்து என பல்வேறு மங்கல நிகழ்வுகளில் தாய்மாமன் சீர் கொடுக்கும் வழக்கம் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த தாய்மாமன் சீர் வழக்கத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெறுவதும் உண்டு. அந்த வகையில் ராஜபாளையம் அருகே தாய்மாமன் கொடுத்த சீர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மலையடிப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி – சூர்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் சூர்யாவின், தாய்மாமனான விஜேஸ்குமார் சீர்வரிசையாக ”கன்னி” என்ற வகையைச் சேர்ந்த நாய் ஒன்றையும், நாய்க்குட்டி ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து திருமணத்திற்கு வந்த மூத்தோர்கள் கூறுகையில், ”தாய்மாமன் சீராக கொடுக்கும் பொருட்களில் ஒரு காலத்தில் நாயும் இருந்தது. பெண் குழந்தைக்கு திருமணம் நிச்சயமான நாளிலிருந்து நாய்க்குட்டி ஒன்று புதிதாக வாங்கி, அதை வளர்த்து, பெண் திருமணமாகி தனது கணவருடைய வீட்டிற்கு செல்லும்போது, அதை சீராக மாமன்மார்கள் கொடுத்து அனுப்புவர்.
இதையும் படியுங்கள் : இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
அவ்வாறு கொண்டு செல்லப்படும் “கன்னி” வகை நாய், மணமகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. அவர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் வராத அளவிற்கு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. நவீன காலத்தில் அது மறக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள இளைஞர்கள் அந்த கலாச்சாரத்திற்கு உயிர் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தனர்.