ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
சோடிபுரா பகுதியில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் இருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சகோதரர்கள் இருவர் மீது குண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இருவரும் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயிரிழந்தவர் பெயர் சுனில் குமார் என்பதும் அவரது சகோதரர் பின்டு குமார் என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் சமீப காலமாக படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பயங்கரவாதிகளால் குறிவைத்து தாக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகள் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் பட்காமில் உள்ள அரசு அலுவலகத்தில் காஷ்மீரி பண்டிட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 5000 பண்டிட் சமூதாயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களுடைய பணிக்கு வரவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமை மேம்படும் வரை தங்களை ஜம்முவுக்கு மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் அவர்களை குறிவைத்து தொடங்கியுள்ளது.