சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. வேகமாக பரவிய இந்த காட்டுத் தீயால் எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களும் எரிந்து நாசமாயின.
நாட்டின் தெற்கு பகுதிகளிலும் காட்டுத் தீ பரவல் அதிகரித்தது. கொளுந்துவிட்டு எரிந்த தீயினால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு அதிகாரிகள், மீட்புப் படையினரின் உதவியுடன் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடினர். விமானங்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயின் பரவல் தீவிரமாக இருப்பதால், அதனை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!
இந்நிலையில், இந்த காட்டுத்தீயால் அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக சிலி தடயவியல் மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் பலர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.







