அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன
இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி , அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது 2019-ல் முடிந்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்றும், எனவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநில அரசை தடை செய்ய முடியாது. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.







