மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இதனால் மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 9 போ் உயிரிழந்தனா், மேலும் 10 படுகாயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூர் முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பத்து கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.
அந்த கடிதத்தில் மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் தனி நிர்வாகம் நடத்துவதை எதிர்ப்பதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய குழுவினரிடமிருந்து உடனடியாக அனைத்து ஆயுதங்களையும் பெற வேண்டும் என்றும் அனைத்து சமுதாய மக்களுடனும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுடைய கணக்குகளை விரிவாக எடுத்து அதன்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளனர்.







