தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத் ராஷ்டிர சமிதி மாற்றப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தேவையான கட்சியின் சட்ட விதிகளும் மாற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தையும், கட்சியின் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி அனுப்பி வைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுக் குழு கூட்டத்தில் தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் பங்கேற்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் சில மாதங்களுக்கு முன்பு பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வறு எதிர்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 12-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதன்முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பாஜகவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். இந்நிலையில், இன்று கட்சியின் பெயரை அவர் மாற்றினார்.