கேரளாவில் டீ கடை நடத்தி வரும் தம்பதி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு 26வது முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கேரளாவின் கொச்சி பகுதியை சேந்த கே.ஆர் விஜயன்(71) மற்றும் இவரது மனைவி(69) இருவரும் வாழ்வாதாரத்திற்காக டீ கடை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் வரும் வருவாயை போதுமானதாக நினைத்து தங்களது வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும் இதுவரை இருவரும் 25 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களது முதல் வெளிநாட்டுப் பயணம் கடந்த 2007ம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்றதாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அது தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு வரை இருவரும் அமெரிக்கா, ப்ரேஸில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு 25 முறை பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தங்களது சுற்றுலா பயணத்தை தவிர்த்தனர். தற்போது உலக அளவில் கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் இருவரும் தங்களது அடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஏகே விஜயன், “கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை டிராவல் ஏஜண்ட் எங்களுக்கு தெரிவித்தனர். இதன் மூலம் எங்களது அடுத்த பயணம் ரஷ்யாவுக்கு என்பது உறுதியானது. இந்த பயணத்தில் இடம் பெறும் பயணிகள் பெயர் பட்டியலில் எங்கள் பெயரை முதலில் சேர்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளோம். அக்டோபர் 21ம் தேதி துவங்கும் இந்த பயணம் அதே மாதத்தின் 28ம் தேதி நிறைவுபெறுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவரது மனைவி மோகனா, “ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள நெடுநாட்களுக்கு முன்பே முடிவுசெய்தோம். இதற்கான திட்டங்கள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக நிறைவேறாமல் போனது. இப்போதுதான் நாங்கள் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது” என்று பேசினார். டீ கடை வருமானத்தில் தங்களது வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் கேரளாவை சேர்ந்த இந்த தம்பதிகள் பலர் மத்தியில் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.