திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் சுப்ரமணியருக்கு தாராபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.  இக்கோயிலில் விஸ்வரூபம்,  உதய மார்த்தாண்டம்,  முதல் காலசந்தி,  உச்சிகாலம்,  சாயரட்சை,  அர்த்த ஜாமம்,  ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனை போன்ற பூஜைகள் தினசரி வழக்கமாக நடைபெறும் பூஜைகளாகும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பட்டு காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணி மற்றும் இரவு 7.15 மணி என 3 வேளைகளில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வருகிறது.  இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்திலும்,  இலவசமாக பொது தரிசனப் பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நாளை முதல் தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தாராபிஷேகம் எனும் பூஜை செய்யப்படும்.

இந்நிலையில் தாராபிஷேகம் கடந்த 2018 ஆம் ஆண்டிலே நிறுத்தப்பட்டிருந்தது.  தற்போது நாளை முதல் (பிப். 28) உபயதாரர்களால் சுமார் 100 லிட்டர் பால் கொண்டு தினசரி காலை தாராபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.