தமிழக-கேரள எல்லையில் போலீசார் முன்பு விறகு கட்டையால் மாறிமாறி தாக்கி கொண்ட கும்பலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் சாமி
தரிசனத்திற்காக வருகைத் தந்துள்ளனர். அதேபோல் தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்குமேடு கிராமப் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அப்பொழுது, தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அவர்களது காரில் சத்தமாக பாடல் ஒலித்தபடி தமிழக- கேரளா எல்லையில் ஆட்டம் போட்டுள்ளனர்.
அதனால் அந்தப் பகுதியில் பெரும் இரைச்சல் ஏற்பட்ட நிலையில், தெற்கு மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சத்தத்தை குறைத்து பாட்டு கேட்கும் படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆவேசம் அடைந்த இருதரப்பினரும் மாறி மாறி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருகே இருந்த கடைகளில் இருந்த விறகு கட்டைகளை எடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில், தமிழக- கேரளா எல்லைப் பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு புளியரை காவல் நிலைய காவலர் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவர் முன்பே இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில், அப்பகுதி மேலும் பரபரப்பானது. அதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த கேரளா போலீசார் மாறி மாறி தாக்கி கொண்ட கும்பலை தடுத்து நிறுத்தி இருவரையும் புளியரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து புளியரை போலீசார் தற்போது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-ரெ.வீரம்மாதேவி