மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை என தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்த விளக்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது எனக் கூறியுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மின்சார வாரியத்தின் கடன் 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்தார். குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் 2 ஆயிரத்து 890.26 கோடி ரூபாய் எனக் கூறினார்.
மக்கள்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்து துறை உள்ளதாகக் கூறிய அவர், டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு காரணம் எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59.15 ரூபாய் நஷ்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசுப் போக்குவரத்து துறையால் 42 ஆயிரத்து 143 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.




