தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,42,796 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,112 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,978 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 28,26,479 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 1,79,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 7,520 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 3,390 பேருக்கும், செங்கல்பட்டில் 2,196 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.







