தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கலுக்கு 21 பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அது தரமற்றதாக உள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கிய போது, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை செய்திருப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் தங்களை ஏமாற்றிய அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.