முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் திடீர் சந்திப்பு: பேசியது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். தமிழ்நாடு சட்டசபையில்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்ட முன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.