2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காகிதமில்லா சட்டப்பேரவை திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாகவும், கணினி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் பேரவை கூட்டம் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல், கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், தொற்றுப்பரவல் குறைந்துள்ள நிலையில், ஜார்ஜ் கோட்டை அரங்கில் நடத்தப்படுகின்றது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சிறப்பு கூட்டம் மட்டும் ஜார்ஜ் கோட்டை அரங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பட்ஜெட்டிற்கான கோரிக்கைகள் வலுக்கும் நிலையில், இதற்கான எதிர்பார்ப்புகளும் கூடுதலாகவே இருக்கிறது.