தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக அரசு கடைசி நேர ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 385 கோடி ரூபாய்க்கு அரசு டெண்டர் விடுத்திருப்பதாக கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் சிக்கி தவிப்பதாக தெரிவித்ததுடன், திமுகவை கோட்டைக்கு அனுப்ப மக்கள் தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஊரை அடித்து உலையில் போட்டவர்களை சிறைக்கும், திமுகவை கோட்டைக்கும் அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து இன்றோடு 4 வருடமாகிவிட்டது, இதுவரை நீதி கிடைக்கவில்லை என்ற அவர், கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் தர மறுத்தார்கள், நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்கினோம் என்றும், கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்காத பழனிச்சாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.







