அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
அமெரிக்கவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இங்கு தமிழ் இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக, ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவிடும் பொருட்டு, 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிட்டது. இதையடுத்து 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகை, 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.
புதிதாக உருவாக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதினை எண்ணரசு கருநேசனுக்கும் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகத்தமிழர்களின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது முன்னர் நிறுவப்பட்டது. இந்நிலையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது தமிழ் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.