புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுமைப்பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டவுள்ளன. இந்நிகழ்வில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 முக்கிய புரட்சிகரமான திட்டங்கள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் முதலமைச்சர் மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் வெற்றித்தடம் பதித்தவர் என்றார். புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொண் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் இப்போதே வங்கிக்கணக்கில் ரூ.1,000 தொகை வரவு வைக்கப்பட்டது என கூறினார்.
பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் மாபெரும் பாய்ச்சலான திட்டங்களை தொடங்கிவைத்துள்ளேன். பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.25 கோடியில் 33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள், 3 ஆசிரியர் அறைகள் கொண்ட 3 அடுக்கு கட்டடம் கட்ட ஆணையிட்டுள்ளேன். விரைவில் அந்த பணிகள் முடிந்து புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என்றார். இந்நாள் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வ.உ.சி.யின் பிறந்தநாளும் இன்றே என்ற அவர், பல பெருமைகளைக் கொண்ட நாளில், 3 முத்தான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தன் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி. காமராஜர், அண்ணா, கருணாநிதி வழித்தடத்தில் திராவிட மாடல் அரசு பயணிக்கிறது. சமூகநீதி திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு பெரும் பாய்ச்சல் காட்டுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி கல்வி பயில்வதில் உள்ள தடையை உடைப்பதற்காகவே புதுமைப்பெண் திட்டம். இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு சமூக – பொருளாதார விடுதலையை வழங்கியுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திராவிட இயக்கத்தின் பெண் சிங்கம். ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை, அது அரசின் கடமை. புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும், பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். தகைசால் பள்ளிகள் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் ரூ.150 கோடி செலவில் அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும். தொலைநோக்கு பார்வையுடன், பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டுகிறோம். கவனமுடன் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் வாய்ப்புகளை இளைய தலைமுறை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல், தகுதியான பணிகளில் சேர வேண்டும். நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்துக்குப் பின் வீட்டுக்குள் முடங்கும் சூழல் உள்ளது, இது மாற வேண்டும். தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வளர்த்தெடுக்கவே தானும், அரசும் உள்ளோம் என்றார்.
– இரா.நம்பிராஜன்