ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

ஆஸ்திரேலிய காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சையத் அகமது உடலை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநிலத் தலைவர்…

ஆஸ்திரேலிய காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சையத் அகமது உடலை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிட்னி போலீசாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா காவல்துறை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது(32), சிட்டினியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளரை கத்தியால் தாக்கியதாகவும், தங்களையும் தாக்க முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்திய குடிமகனான முகமது ரஹ்மதுல்லா சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த பிரச்சினையை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அவரது மரணம் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

அவரது உடலுக்கு உறவினர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து அவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களது நடவடிக்கை அவரின் குடும்பத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1630869101265469445?t=dcFD_vLIlc2ghxyt4OxgrQ&s=08

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.