ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்.
மேலும் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் ஜே இ இ தேர்வை எழுதும் வகையில்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக மாணவர்களுக்கு 10-ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற தேசிய தேர்வு முகமை 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.







