ஜெர்மனியில் நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்று சொந்த ஊர் வந்த கணேசனுக்கு, அவரது உறவினர்கள் மேள தாளம் முழங்க தோளில் தூக்கி சென்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். உயரம் குன்றிய மாற்றித்திறனாளியான இவர், தமிழ்நாடு அளவிலும், உலக அளவிலும் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் கடந்த ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான உலக அளவிலான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என பிரிவுகளில் 3 தங்க பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.,
இந்நிலையில் இன்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த கணேசனுக்கு உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் உசிலம்பட்டி பகுதி விவசாய சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் மேள தாளத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கணேசனுக்கு உறவினர்கள் பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கணேசனை உறவினர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டு மேளதாளத்துடன் உசிலம்பட்டியின் நகர் பகுதியில் ஊர்வலமாக அழைத்து சென்று பதக்க வீரர் கணேசனை நெகிழ வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கணேசன், ஜெர்மனிக்கு சென்று பதக்கம் வென்றது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், கடந்த காலங்களில் சொந்த பணத்திலேயே இது போன்ற போட்டிகளில் பங்கேற்று வென்று வந்தாகவும், தற்போது நடந்த இந்த போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு உதவி தொகை அளித்து ஊக்கப்படுத்தியதால் உற்சாகத்துடன் விளையாடி தங்க பதக்கத்தை வென்றுள்ளதாகவும் கூறினார். மேலும், அரசு எங்களை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும் என கணேசன் கோரிக்கை விடுத்தார்.