பெருமை பேசுவதோ, புகழ்பாடுவதோ கூடாது…
முதலமைச்சரின் அன்புக் கட்டளையை ஏற்ற உறுப்பினர்கள்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைக்கே முக்கியத்துவம்…
இந்தியாவிற்கே முன்னுதாரணமாகும் தமிழக சட்டப்பேரவை…
சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி அதில் பேசக்கூடிய உறுப்பினர்கள் தான் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி தலைவர்கள் குறித்து பெருமை பேசுவதும் புகழ் பாடி உரையை தொடங்குவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. நூற்றாண்டுகள் கடந்தாலும், உறுப்பினர்கள் ஆற்றிய உரை அவைக்குறிப்பில் இருக்கும் என்பதாலும் அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினர் தன் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் புகழ்பாடுவதை விரும்பி ரசிக்கும் சில தலைவர்களும் உண்டு. அந்த வழக்கத்திற்கு மாறாக தான் புதிய மாற்றத்தை முன்னெடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு துறைரீதியிலான மானிய கோரிக்கை விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவை கூடும் நாட்களில் குறிப்பிட்ட நாட்களே தவிர்த்து மீதமுள்ள நாட்களில் ஒவ்வொருநாளும் வினாக்கள் – விடைகள் நேரத்தின் போது, தங்கள் தொகுதிசார்ந்த பிரச்னைகளை கேள்விகளாக எழுப்பி அதற்கு அமைச்சர்கள் மூலம் தீர்வை பெற சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சிப்பார்கள். மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டடங்கள், உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்பதால் சட்டப்பேரவையில் இதற்கென வினாக்கள் – விடைகள் நேரம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
கேள்வி கேட்கும் உறுப்பினருக்கு மறு கேள்வி கேட்கும் வாய்ப்பு, பதிலளிக்கும் அமைச்சரின் சார்ந்த துறையில் கேள்வி உள்ளது என கருதும் உறுப்பினர்களுக்கு துணைக்கேள்விகள் கேட்கவும் சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி நிரலில் ஒரு உறுப்பினருக்கு ஒரு வினா தான் என அச்சிடப்பட்டிருந்தாலும், 5 முதல் 6 கேள்விகள் வரை கூட வாய்ப்பு தற்போது வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. வினாக்கள் – விடைகள் நேரம் ஒரு மணி நேரம் தான் என்றாலும் துணைக் கேள்விகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவையின் அனுமதியுடன் வினாக்கள் – விடைகள் நேரத்தையும் நீட்டித்து மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க சபாநாயகர் வழிவகை செய்கிறார்.
தன் தொகுதி சார்ந்த மக்கள் நலனில் அக்கறை செலுத்த, அவர்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தலைவர்களின் பெருமையும், புகழையும் பாடி கடத்திக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக மக்கள் பிரச்னை சார்ந்த கேள்விகளுக்கான நேரங்கள் குறையத் தொடங்கின. இந்த புகழ்பாடுதல் என்பது இன்று நேற்று அல்ல கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் இருந்த ஒன்று தான் என்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு சட்ட மன்றத்தில் மக்கள் பிரச்னைகளை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலில் அறிவுறுத்தினார். பின்னர் கட்டளையாகவும் அதனை பிறப்பித்தார்.
முதலமைச்சரின் உத்தரவை மதித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கட்சி சார்ந்த தலைவர்களையோ, அல்லது முதலமைச்சரை புகழ்ந்து பேசுவதை அறவே தவிர்த்துள்ளனர். பேரவைத் தலைவருக்கு வணக்கத்தை சொல்லி உறுப்பினர்கள் கேள்வியை கேட்க துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலை வழங்குவதன் மூலம், அதிக கேள்விகளை எழுப்பி அதற்கான தீர்வை பெறவும் முடிகிறது. முதலமைச்சரை போலவே எதிர்க்கட்சி தலைவர்களும், அவரவர் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பேசும் போது தலைவர்கள் புகழ்பாடுவதை தவிர்க்க அறிவுறுத்தினால், மக்கள் பிரச்னைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழக சட்டப்பேரவை விளங்கும்
- விக்னேஷ், நியூஸ் 7 தமிழ்