சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதை மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ள நிலையில், அதனை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. இத்திட்டத்தின் பாதை தொடர்பான தமிழக அரசின் கருத்துகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அவை கிடைத்த பிறகு பணிகள் தொடங்கப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை – சேலம் இடையிலான பசுமைவழிச் சாலை முதலில் ரூ.10,000 கோடி செலவில் 8 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அத்திட்டம் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அத்திட்டத்தின் மதிப்பீடும் ரூ.7,230 கோடியாக குறைக்கப்பட்டது. பின்னர் வனப்பகுதிகளின் வழியாக சாலை அமைக்கப்படும் தூரம் 13.29 கி.மீட்டரில் இருந்து 9 கி.மீ ஆக குறைக்கப்பட்டதுடன், இந்த சாலையை இணைக்கும் வகையில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் (30 கி.மீ), செம்மாம்பாடி – சேத்பட் (4.7 கி.மீ), போளூர் – திருவண்ணாமலை (16 கி.மீ) என 50.70 கி.மீ தொலைவுக்கு இணைப்பு சாலைகளை அமைக்கும் திட்டமும் கைவிடப்பட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் தான், இத்திட்டத்திற்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இத்திட்டத்தை ரத்து செய்து 2009-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழலில் சென்னை – சேலம் விரைவுச்சாலையின் பாதை தொடர்பாக தமிழ்நாடு அரசின் கருத்துகள் மத்திய அரசால் கேட்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய அமைச்சர் கூறிருப்பதை வைத்துப்பார்க்கும் போது, விரைவுச்சாலை திட்டத்தின் பாதையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவோ? என்ற ஐயம் எழுகிறது. சென்னை – சேலம் விரைவுச் சாலைக்கு அது அமையவுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 6 மாவட்ட உழவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அது பற்றி பொதுமக்களிடம் தமிழக அரசு தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால், சாலையின் பாதை குறித்து மத்திய அரசு கருத்து கேட்ட விவரத்தை தமிழக அரசு தெரிவிக்காதது ஏன்? எனத் தெரியவில்லை. சென்னை – சேலம் இடையிலான விரைவுச் சாலை திட்டத்தை முந்தைய ஆட்சியில் திமுக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், முதல் முறையாக பிரதமரை, முதலமைச்சர் சந்தித்த போது, எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அதன்பின்னர் தமிழக சட்டப்பேரவையில் இத்திட்டம் தொடர்பாக பா.ம.க. உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு விடையளித்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை – சேலம் 8 வழிச்சாலை குறித்த திமுக நிலைப்பாடு மாறவில்லை என்று உறுதியளித்தார். இதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை – சேலம் விரைவுச் சாலையின் பாதையில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட, அதனால் உழவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளோ, அவர்களிடமிருந்து பறிக்கப்படவிருக்கும் நிலங்களின் அளவோ சிறிதும் குறையப் போவதில்லை. சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பர். யாரோ சிலர் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. விவசாயிகளை பாதிக்கும் விரைவுச்சாலை திட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து போராடி வருகிறது. இத்திட்டத்திற்காக சுமார் 7 ஆயிரம் உழவர்களிடமிருந்து சுமார் 6,978 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடந்தேன்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், விரைவுச்சாலை திட்டத்தை ரத்து செய்தது. அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் கூட, பறிக்கப்பட்ட நிலங்களை உழவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பை தான் போராடி பெற்றுத்தந்தேன். உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பாட்டாளி மக்கள் கட்சி மீட்டுக் கொடுத்த உழவர்களின் நிலங்களையும், உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் எந்தவொரு
முடிவையும் தமிழக அரசு எடுக்கக் கூடாது. எனவே, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








