நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதல் முறையாக நீட் தேர்வை எழுதி 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்ததுடன், நீட் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அவரது பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர் முதல் முயற்சியிலேயே தேர்வை வென்று சாதித்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் பேட்டியளித்த மாணவர் பிரபஞ்சன் கூறியதாவது, “நான் இந்த ஆண்டு தான் 12ம் வகுப்பு தேர்வை எழுதினேன். முதல் முறை நீட் தேர்வை எழுதினேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகுந்த உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற அனுபவத்தை நான் இதற்குமுன் உணர்ந்தது இல்லை.
அம்மா, அப்பா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்களாக உள்ளார்கள். செஞ்சியில் எங்கள் ஊருக்கு அருகிலேயே அவர்கள் வேலை செய்கிறார்கள். எனக்கு சிறுவதில் இருந்தே இது கனவு கிடையாது. 8, 9ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு உயிரியல் படிப்பு பிடிக்கும். எனவே மருத்துவம் படிக்கலாம் என்று முயற்சித்தேன்” என்று அவர் கூறினார்.







