அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் இன்று தாக்கல் செய்தார் .
2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டம் இரங்கல் தீர்மானத்துடன் ஒத்தி வைக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதிலும் கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி எழுதும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.அந்த சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் , திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியது.
அதற்கேற்ப, 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அதில் தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து, பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் நடத்தப்படும் ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. அதனால் டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று நிறைவேற்றினார் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்.