விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு , விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்பதை தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பயிர் காப்பீட்டின் முழு பயனை அடைவதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதாவது சம்பா , தாளடி , பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது . ஆனால் நடவு முடியும் தருவாயில் , தொடர் மழை , பொருளாதார சூழ்நிலை ஆகிய காரணங்களால் அரசு குறிப்பிட்ட 15 ஆம் தேதிக்குள் ஏழை , எளிய விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது. குறிப்பாக நடவு பணி முழுமையாக முடிந்த பிறகு , அடங்கல் நகல் பெற்று காப்பீடு செய்ய முடியும்.
இச்சூழலில் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பருவ நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக் கெடுவை நீட்டித்து தர வேண்டுகோள் வைக்கின்றனர்.
எனவே மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கிப் பருவமழை தீவிவிரமடைந்து, விவசாயப் பணிகள் தடைப்பட்டு, பயிர் நடவிலும் பாதிக்கப்பட்டு, காப்பீடும் செய்ய இயலாத சூழலில் உள்ள அனைத்து விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை இன்னும் நீட்டித்து தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.