தமிழ் மொழி தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்துகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரியின் பகிர்மான தொகை 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை 171% அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “ரூ.1,000 கோடி செலவில் நெய்வேலி சுரங்கத்தில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம். சென்னை மெட்ரோ இரண்டாம் திட்டத்திற்காக 3770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1456 கோடி செலவில் 11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, “தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, பழமையான இலக்கியம் கொண்டது. தமிழ் மொழியின் பெருமை மொத்த இந்தியாவுக்குமான பெருமை. மருத்துவம், பொறியியல் கல்வியை தமிழ் மொழியிலேயே தர வேண்டும். தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களை அறிவிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றும் வேண்டுகோளும் விடுத்தார்.