தற்போதைய சூழ்நிலையில் பான்-இந்தியா சினிமா போட்டி என்று வரும்போது
தமிழ்த் திரையுலகம் அதில் நிச்சயம் இருக்கும் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில் யானை பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் பங்கேற்றனர்.
இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வருகின்ற ஜூலை
1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகின்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் ஹரி, ” திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடங்களில் கடலூர் மாவட்டம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பான்-இந்தியா திரைப்பட போட்டி என்று வரும் பொழுது நிச்சயம் அதில் தமிழ் திரையுலகம் இருக்கும்” என்றார்.
தற்போது வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் வெற்றி மட்டுமல்லாது தமிழ் திரையுலகின் வெற்றி என்று இருவரும் தெரிவித்தனர்.
மேலும் வெளியாகவுள்ள யானை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என நம்புவதாகவும் குறிப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில் திரையங்க உரிமையாளர் துரைராஜ், படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-மணிகண்டன்








